Sunday, August 23, 2009

முத்துணைச் செல்வம்

உடலோடும் உயிரோடும்
ஊடுருவி
உறைந்திருக்கிறது
ஆயிரம் உணர்வுகள்

ஆனாலும் என்னோடு
கலந்து துணையாய்
இணந்திருப்பது
மூன்றே மூன்று

தெளிவான சொல்
கொடுத்த
தன்னம்பிக்கையும்

பரந்த அறிவை
நல்கிய
நல்ல நட்பும்

உண்மையான அன்பை
உரிமையாக்கிய
இனிய காதலும்

சிலந்தி வலையாய்
பின்னுகிறது
என் வாழ்க்கையில்

எல்லோராலும் பேசப்பட்டாலும்
இதயத்தால் மட்டுமே
பரிமாறப்பட்டது காதல்

தூரத்தில் நான் நின்றாலும்
காலை நனைத்துச்
சென்ற அலை போல்
நான் தேடிச் செல்லாது
என்னை நாடி வந்தது
காதல்

தீய எண்ணங்களை
வடிகட்டி
நல்லெண்ணங்களை
விதைத்தது
நம்பிக்கை

புது முயற்சிகளை
செய்யத் தூண்டியது
காதல்
தொடங்கு என்று
ஆணையிட்டது
தன்னம்பிக்கை
அருகில் இருந்து
செய்து முடித்தது
நட்பு

சில ஏக்கர் கூடிய
விளையாட்டுத்திடல்
இந்தக் காதல்
பரந்து விரிந்திருக்கும்
நம் புவியாய்
இந்த நட்பு
பல பூமிகள் கொண்ட
பேரண்டமாய்
இந்த நம்பிக்கை

காதல் வெண்ணிலவாகி
ரகசியமாய் குளுமை தந்தது
நட்பு பகலவனாகி
பகிரங்கமாய் வெளிச்சம் அளித்தது
நம்பிக்கை நட்சத்திரமாகி
எந்த நேரமும் மின்னியது

மூன்றும் என்னோடு
முத்தமிழ் போல்
முக்கனி போல்
முத்துணையாக
இனிக்கிறது.........

1 comment:

  1. காதல் வெண்ணிலவாகி
    ரகசியமாய் குளுமை தந்தது///

    அழகான வரிகள்!!

    ReplyDelete