விரக்தியின் கொடுமையில்
வீழ்ந்து போனாய்
நகர வாழ்க்கையிலிருந்து
நரக வாழ்க்கை
தேர்ந்தெடுத்தாய்
முள்ளை முள்ளால்
எடுக்க நினைத்து
வாழ்க்கையின் கண்ணைக்
குத்திக் கொண்டாய்
சிலரிடம் மட்டும் பேசினாய்
பலரை நன்றாய் “கவனித்தாய்”
சூரியன் உதிப்பதும்
அஸ்தமிப்பதும் கூட
அந்தந்த திசையில் தான்
உன் உருட்டுக்கட்டைகளுக்கும்
வீச்சரிவாள்களுக்கும்
திசைகளே இல்லை
மனம் பேசும் வார்த்தைகளும்
உனக்குக் கேட்பதில்லை
அவலங்களின் கூக்குரலும்
உனக்குக் கேட்பதில்லை
நீ சேர்த்த தங்கத்தில்
ஜொலிக்கிறது
உன் மனைவி உடல்
நீ பறித்த தங்கத்தில்
கருகியது
பல குடும்ப மலர்
ஒருவனை அழித்து விட்டால்
நீ ”கடவுளின் மறுபாதி”
என நீ நினைத்தால்
ஒருவனை உருவாக்குகிறவன்
கடவுளின் மறுபிறப்பு
என எப்போது உணர்வாய்?
நீ அடியாள் தான்
என்றுமே
யாருக்கோ அடிமைதான்
அந்தச் சுமையிலிருந்து
வெளியே வருவாயா?
வறுமையைத் துணிந்து
தேவைகளை அறிந்து
யதார்த்த வாழ்க்கை
நீயும் வாழ்வாயா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment