Sunday, August 23, 2009

முத்துணைச் செல்வம்

உடலோடும் உயிரோடும்
ஊடுருவி
உறைந்திருக்கிறது
ஆயிரம் உணர்வுகள்

ஆனாலும் என்னோடு
கலந்து துணையாய்
இணந்திருப்பது
மூன்றே மூன்று

தெளிவான சொல்
கொடுத்த
தன்னம்பிக்கையும்

பரந்த அறிவை
நல்கிய
நல்ல நட்பும்

உண்மையான அன்பை
உரிமையாக்கிய
இனிய காதலும்

சிலந்தி வலையாய்
பின்னுகிறது
என் வாழ்க்கையில்

எல்லோராலும் பேசப்பட்டாலும்
இதயத்தால் மட்டுமே
பரிமாறப்பட்டது காதல்

தூரத்தில் நான் நின்றாலும்
காலை நனைத்துச்
சென்ற அலை போல்
நான் தேடிச் செல்லாது
என்னை நாடி வந்தது
காதல்

தீய எண்ணங்களை
வடிகட்டி
நல்லெண்ணங்களை
விதைத்தது
நம்பிக்கை

புது முயற்சிகளை
செய்யத் தூண்டியது
காதல்
தொடங்கு என்று
ஆணையிட்டது
தன்னம்பிக்கை
அருகில் இருந்து
செய்து முடித்தது
நட்பு

சில ஏக்கர் கூடிய
விளையாட்டுத்திடல்
இந்தக் காதல்
பரந்து விரிந்திருக்கும்
நம் புவியாய்
இந்த நட்பு
பல பூமிகள் கொண்ட
பேரண்டமாய்
இந்த நம்பிக்கை

காதல் வெண்ணிலவாகி
ரகசியமாய் குளுமை தந்தது
நட்பு பகலவனாகி
பகிரங்கமாய் வெளிச்சம் அளித்தது
நம்பிக்கை நட்சத்திரமாகி
எந்த நேரமும் மின்னியது

மூன்றும் என்னோடு
முத்தமிழ் போல்
முக்கனி போல்
முத்துணையாக
இனிக்கிறது.........

Thursday, August 20, 2009

இமைகளில் உன் இனிய சுமை

எப்படியெல்லாம்
என்னை ரசித்தாய்
எப்பொழுதெல்லாம்
என்னை ரசித்தாய்

காற்றில் என்
கூந்தல் அசைய
அது ஆயிரம் சேதி
சொல்கிறது
என்றாயே

சூரியக் கதிர்களும்
திடமாய் வீச
வானத்தில் இருந்து
ஒரு துளி அமுதமும்
மெல்ல என் கன்னத்தில்
விழுந்தோட
அதைப் பிடிக்க நீ
கையேந்தி நின்றாயே

விழி மூடி சிறிது நேரம்
நான் லயிக்க
பின் இமைத்த நேரம்
பார்த்து ”தேவதை
உன் கண்ணைத்
திறந்து விட்டது”
என்றாயே

உனைத் தழுவ வேண்டும்
என நினைத்து தானோ
சூரியனும் பொன் நிறக்
கதிர்களை தூதாய்
அனுப்பினான் என்றாயே

மழை வருமா
என நான்
வானம் பார்த்தால்
”கரு விழிகளும்
கருமேகமும்
இணைந்தன”
என்றாயே

உன் ஒவ்வொரு
ரசனையும் இனிய
நினைவாய் நெஞ்சில்
சாமரம் வீசுகிறது

இன்றும் நீ ரசித்த
இனிய கானம்
மென்மையாய்
ஒலிக்கிறது

முழு நிலவும்
முல்லைப்பூவாய்
சிரிக்கிறது

நீ முத்தமிட்ட
அந்த இனிய
இரவை நினைத்து
மெத்தையில்
நான் துவழ்கிறேன்
தூக்கம் கொடுப்பாயா
என் தலைவா.........................
...

Friday, August 14, 2009

மழையோடு சில உளறல்

உன்னோடு தனிமையில்
உறவாட வேண்டும்
சில மணித்துளிகள்

எனக்கென பிரத்யேகமாய்
என்னைத் தேடி ஆசையாய்
என் வீட்டு முற்றத்தில் விழு

சூரியனை மறைத்தாய்
வெப்பத்தைக் குறைத்தாய்
குளிர்ந்ததடி என் மனம்

மண்ணின் விழுந்த உன் துளிகள்
செல்லும் இடம் நோக்கி
பாய்கிறது என் மனமும்

நீ தான் அடர்ந்த காடு
நீ தான் அதில் தோன்றும் ஆறு
நீ தான் அது கலக்கும் பெருங்கடல்

என் மீது விழுந்து
பாவம் தீர என்னைக் கழுவி
தனியே விலகிச் செல்லாதே

என் உணர்வு புரிகிறதா
உன்னைத் தொடர்ந்து உன்னுடன்
நானும் வர விரும்புகிறேன்

கூரையைக் கிழித்து பெய்கிறாய்
காற்றில் சிலிர்த்து பறக்கிறாய்
பொய்களைத் தகர்த்து எறிகிறாய்

வயல்களில் விழுந்து
விதைகளைச் செழிப்பது போல்
மனதில் ஆசைகளை வளர்க்கிறாய்

பருவக்காற்றால் தோன்றிய நீ
பருவப் பெண்ணிடம் சேர்ந்து விடு
வசந்தமாய் நான் வாழ்வேன்

இசையாகப் பொழிந்து
இனிய ராகம் பாடி
என்றும் என்னுடனே இரு.........................

Wednesday, August 12, 2009

அடிமைச்சுமை

விரக்தியின் கொடுமையில்
வீழ்ந்து போனாய்

நகர வாழ்க்கையிலிருந்து
நரக வாழ்க்கை
தேர்ந்தெடுத்தாய்

முள்ளை முள்ளால்
எடுக்க நினைத்து
வாழ்க்கையின் கண்ணைக்
குத்திக் கொண்டாய்

சிலரிடம் மட்டும் பேசினாய்
பலரை நன்றாய் “கவனித்தாய்”

சூரியன் உதிப்பதும்
அஸ்தமிப்பதும் கூட
அந்தந்த திசையில் தான்
உன் உருட்டுக்கட்டைகளுக்கும்
வீச்சரிவாள்களுக்கும்
திசைகளே இல்லை

மனம் பேசும் வார்த்தைகளும்
உனக்குக் கேட்பதில்லை

அவலங்களின் கூக்குரலும்
உனக்குக் கேட்பதில்லை

நீ சேர்த்த தங்கத்தில்
ஜொலிக்கிறது
உன் மனைவி உடல்

நீ பறித்த தங்கத்தில்
கருகியது
பல குடும்ப மலர்

ஒருவனை அழித்து விட்டால்
நீ ”கடவுளின் மறுபாதி”
என நீ நினைத்தால்

ஒருவனை உருவாக்குகிறவன்
கடவுளின் மறுபிறப்பு
என எப்போது உணர்வாய்?

நீ அடியாள் தான்
என்றுமே
யாருக்கோ அடிமைதான்

அந்தச் சுமையிலிருந்து
வெளியே வருவாயா?

வறுமையைத் துணிந்து
தேவைகளை அறிந்து
யதார்த்த வாழ்க்கை
நீயும் வாழ்வாயா?

Sunday, August 9, 2009

முத்தத்தின் நியதிகள்

முதல் முத்தத்தின்
நினைவோடு பெண்
கடைசி முத்தத்தில்
கரைந்தவனாய் ஆண்

முத்தம்
ஆடம்பரமில்லாதது
எளிதில் கிடைப்பது
எளிதில் மறக்கப்படுவது
சுயநலமில்லாதது
பகிரப்பட வேண்டியது
கம்யூனிச கொள்கை போல்

வார்த்தைகள் மிகும்போது நிறுத்த
இயற்கை அளித்த எளிய படைப்பு

ஏங்கியிருந்த
அன்பு மனங்கள்
முதல் முத்தத்தைத் தயங்கி
இரண்டாவதை ஊக்குவித்து
மூன்றாவதை இயல்பாய்
நான்காவதை உரிமையாய்
ஜந்தாவதை ஆசையோடு
பெற்று, கொடுத்து
களித்து, களைத்து
ஓய்வு பெறும்


உண்மையின் உறைவிடம்
காதலென்றால்
பொய்மையின் மறைவிடம்
முத்தம்

புதிதாய்ப்
பிறக்க வேண்டும்
இனிமையாய்
விளையாட வேண்டும்
யார் கொடுத்து
யார் வாங்க என்ற
குழப்பம் வேண்டும்
பிரிந்திருந்த போது
சேர்த்து வைத்த
முத்தமெல்லாம்
இணையும்போது
சுவைக்கப்படவேண்டும்
இது முத்தத்தின் விதி

Saturday, August 8, 2009

நம் காதலும் தெய்வீகம் தான்!

நிலைவாசல் முட்டி
உன் நெற்றி புடைத்ததில்
மனம் பதறி நான் துடித்து
ஐஸ் ஒத்தடம் கொடுத்து
அன்பாய்த் தடவி
மருந்துகள் இட்டு
கவனித்த நேரத்தில்
உன் கண்களில் பளிச்சிட்ட
பெருமையின் பிரகாசத்தில்...

வருடத்திற்கு ஒரு முறை
சொற்ப விடுமுறையில்
வீட்டை நாடி வந்த
முதல் நாள் பகலில்
காலையிலிருந்து தனியே
கன்னத்தில் கை வைத்து
காத்திருக்கும் அன்புக்குழந்தை
ஆட்டோவைக் கண்டவுடன்
“அப்பா வந்தாச்சு” என
அழைப்புக் குரல் கொடுக்க
அன்றலர்ந்த மலராய்
தலை குளித்து மலர் சூடி
எட்டிப் பார்க்கும்
உன் எதிர்பார்ப்பின் ஆவலில்.....

நீ மும்முரமாய்
சமையல் செய்யும்பொழுது
பின்னிருந்து அணைக்கையில்
வியர்வையின் கசகசப்பில்
மெல்ல நீ நெளிந்தாலும்
முகத்தில் உதிக்கும்
கர்வப் புன்னகையில்.....

கூடல் விரும்பும் செல்களில்
மோகம் கொண்ட நேரத்தில்
நம்மைத் தனியே விடாது
மடிமேல் விளையாடும்
அன்புக் குழந்தையை
விலக்க மனமில்லாமல்
ஆசையை அடக்கிய
அர்த்தம் கொண்ட பார்வையில்...

பிள்ளை வாளி
எடுத்துக் கொடுக்க
மனைவி சலவைத்தூள்
கரைத்துக் கொடுக்க
குடும்பத் தலைவன்
இருசக்கர வண்டி அலச
குடும்பமே இணைந்து செய்யும்
வேலைகளின் பங்கெடுப்பில்....

உன் மீதான என் காதலை
மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்
என்ற வரைமுறைக்குள்
சுருக்கி விட முடியுமா?

பிரிந்திருந்தாலும் விலகாது
உறையாத நினைவுளில்
ஒளிந்திருக்கும்
நம் நேசம் சொல்லும்
நம் காதலும்
தெய்வீகமானதென்று

Thursday, August 6, 2009

வாழ்க்கை ஓடத்தில் ஆசைத் தோணி

வடம் கட்டி இழுக்க
வீதியிலே தேரசையும்
ஆசை கொண்ட நெஞ்சினில்
வாழ்க்கை பயணிக்கும்

ஸ்வரங்களின் கோர்வையில்
இன்னிசை பிறக்கும்
ஆசைகளின் ஆக்கிரமிப்பில்
வாழ்க்கை சிறக்கும்

காதலில்லாமல்
இவ்வுலகில்லை
ஆசையில்லாமல்
வாழ்க்கையுமில்லை

காலையில் உதித்து விட
சூரியனுக்கு ஆசை
இருள் குவிந்த இரவில்
சந்திரனுக்கு ஆசை
நிஜத்தைத் தொடர
நிழலுக்கு ஆசை
காதலைப் பற்றி விட
இளைஞன் உனக்கு ஆசை

வண்ணக் கனவுகளுடன்
பகல் கனவு கண்டு
காதலியைத் தேடி
குறுஞ்செய்தி அனுப்பி
கடற்கரை சினிமா என
ரெக்கை கட்டிப் பறந்து
காதலை வளர்க்க வேண்டி
ஆசைகளை விதைத்த மனம்

அதிலே பாதியாவது
வாழ்க்கையெனும்
நெடும்பயணத்தில்
உன்னதம் பெற்றிடும்
வழிகளை யோசிக்க
ஆசைப்படக்கூடாதா?

Wednesday, August 5, 2009

கொளத்தாங்கரை கும்மி!

அக்காவுக்கு சொகமில்லேன்னு
பச்சப்புள்ளக்கு பசிக்குமேன்னு
அம்மா இங்கே போகச் சொல்ல
பாசத்திலே ஓடியாந்தேன்

துணிமணியைத் தொவைச்சுப்போட
கொளத்தாங்கரைக்கு வந்து சேந்தா
சரசம் பண்ண நினைக்கலாமா
விரசமா நீங்க பேசலாமா

உங்க அண்ணி மட்டும் அம்மாவா
ஒடன் பிறந்தா ரத்தினமா
நம்பி என்னை அனுப்பி வச்சா
மாசமாக்க பாக்கலாமா

அக்கா இருந்தா ராமன் மாறி
குளத்துக்குள்ள கிருஷ்ணன் மாறி
வலையை வீசி கொல்லுறீயளே
வகிந்துருவேன் தள்ளி நில்லும்

தண்ணிய விட்டு வெளியே வந்தா
செதுல எடுத்து சுத்தம் பண்ணி
கொதிக்கிற மீன் கொழம்பில
கொட்டிப்புடுவேன் பாத்துக்கோரும்

உன் உடம்பில் ஒரு பாதியா
உன் உசிரில் சரி பாதியா
பொஞ்சாதி ஒருத்தி இருக்கா
பொன்னாட்டாம் ஜொலிப்போட

அந்தக் காவல் தெய்வம் கண்ணகியை
கண் கலங்க வைக்காதே
ஊரு மேயும் எண்ணத்தை
உடைப்பில் ஓடு என் மச்சான்

Monday, August 3, 2009

நீயும் மனிதனாகு!

உன் ஒவ்வொரு வார்த்தைக்கும்
ஒரு பிரதிபலிப்பு இருப்பது
உனக்குத் தெரியுமா ?

வஞ்சம் மிகுந்த வார்த்தைகள்
அம்பெனப் பாய்ந்து தாக்குவது
உனக்கு ஏன் புரியவில்லை ?

ஏளனச் சிரிப்பு காட்டி
ஏன் என் உள்ளக் குமுறலில்
குளிர் காய நினைக்கிறாய் ?

உன்னால் மட்டும் தான்
என்னைக் காக்க முடியுமா ?

இது போலியான பாதுகாப்பென்று
உனக்குத் தெரியவில்லையா ?

உண்மை நெருப்பாக சுட
ஒரு நாள் நீ தப்பித்து
ஓடத்தான் போகிறாய்!

இனி உன் வார்த்தைகள்
என் இதயத்தில்
காயம் உண்டாக்காது

இரும்பு மனம் கொண்ட
உன் இருமாப்பு
எனை ஒன்றும் செய்யாது

அர்த்தமின்றி வரும் வார்த்தைகள்
வந்த வேகத்திலேயே
இனி சத்தமின்றி விலகிப்போகும்

தவறான புரிதல் கொண்டு
பகட்டான வார்த்தை சொல்லி
பொறி வைத்து பிடித்திட
நான் என்ன சுண்டெலியா ?

உன் தோல்வியைத் தவிர்க்க
என்னை நீ சாடினால்
நான் உணவை மறந்து
தூக்கம் இழந்து
அல்லல் படுவேன்
என நினைத்தாயோ ?

ஏ சுயநல மனித மனமே!
இதில் இருந்து தப்பிக்க
விழி திறந்து வழி தேடு

எள்ளி நகையாடும்
உன் ஏளனத்தை விடுத்து
எளிமையை நீ நாடு

ஆத்திரம் கொண்ட
உன் அகம்பாவத்தை விடுத்து
அமைதி வழி தேடு

பொய்யென்னும் போர்வைக்குள்
சுருண்டு படுத்து ஒளியாமல்
நேர்மையில் கரைந்து விடு

அன்பாலே ஆட்கொண்டு
மனக் கதவைத் திறந்துவிட்டு
குற்ற உணர்வை நீக்கு!

நீயும் மனிதனாகு!


Sunday, August 2, 2009

காதலின் பாதை

இன்று நேற்றா
உன்னை விரும்புகிறேன்

பல வருடங்களுக்கு முன்
மத்தாப்பின் ஒளியில்
மலர்ந்திருந்த வதனத்தைப்
பார்த்ததிலிருந்தே
நான் தொலைந்திருந்தேன்

நீயும் தான் எனை விரும்புகிறாய்
என் வருகையை எதிர்பார்க்கிறாய்
வராத போது துவண்டு விடுகிறாய்

ஆனால்,
காதலை மட்டும்
சொல்வதே இல்லை

கேட்டால்,
”என் இதயத்தோடு ஏன் விளையாடிகிறீர்கள்”
என்கிறாய்
இந்த சொல் மட்டும்
தாங்க முடியவில்லை கண்னே
களைத்தே போனேன் நான்
இந்த விளையாட்டில்
என் முகத்தை பார்த்து
தெரிந்து கொள்ள முடியாதா
நான் உண்மையானவன் என்று

சுயநலமாக என்னை மட்டும்
குற்றம் சொல்கிறாய்
உனக்கு காதலின் மேல் பயம்
எங்கு சென்றாலும்
எங்கு மறைந்தாலும்
நாம் இருவரும் ஒன்றென்பதை
ஏன் மறுக்கிறாய்

மாயைகளிலிருந்து தப்பித்து
காதலில் பொறுப்பேற்று
என்னுடன் சேர்ந்து வா
ஈருடல் ஓருயிராய்
செல்வோம் இனி காதலின் பாதை

Saturday, August 1, 2009

முத்தமும் இன்பத்தீயும்

உன்னையே நினைத்திருந்தேன்
உன் ஒவ்வொரு அசைவையும்
கவனித்திருந்தேன்
உன் அன்புக் கரங்களால் எனை அணைத்தாய்
எனக்குள் காதல் காய்ச்சல் தோன்றியதடி

நான் சொல்வதை இன்று
கண்மூடிக் கொஞ்சம் கேள்
என்னைப்போல் உன்னை
யாராலும் நேசிக்க முடியாது
ஏனென்றால்
நான் நேசிக்கும் அழகைப் போல்
யாராலும் உனை நேசிக்க முடியாது

பகலுக்காக சூரியன் ஒளிர்கிறது
இரவுக்காக சந்திரன் ஒளிர்கிறது
என் கண்கள் மட்டும்
நீ என் பெயரை உச்சரிக்கும்பொழுது
பிரகாசமாய் ஒளிர்கிறது

என் இதயத்தை எடுத்துக்கொண்டு
கிறங்க வைக்கும் உன் முத்தத்தால்
உன்னைக் காதலிக்கும் என்
ஆன்மாவை ஆசீர்வாதம் செய்!

இந்தக் காதல் காய்ச்சல்
புதிதல்ல அன்பே
ஆதாம் ஏவாளை
அணைத்த பொழுது
பற்றியெரிந்த அதே தீ தான்
கொதிக்கும் அதே காய்ச்சல் தான்
இப்போது எனக்கும்

நீ இறுக என்னை
அணைக்கும்போது
உன் இதழ்களை ஒற்றி
முத்தமிடும்போது
தோன்றும் இந்த காய்ச்சலை
அனுபவிக்க வேண்டுமடி!
போதை தரும் இந்த காய்ச்சலோடு
காதல் காய்ச்சலில்,
தகிக்கும் உடம்பு சூட்டில்,
உன் நினைவுகளில் புலம்ப,
இப்படி ஒரு இனிமையான வழியா???