Thursday, July 30, 2009

யாதுமாகி நின்றாய்!

குமரியாய் என் கண்களில் விழுந்து
இன்று அன்னையாய் ஆதரிக்கிறாய்
விழிகளுக்கு விருந்து தந்து
இன்று உயிருக்கு உரமாகிறாய்

பூவுக்குள் நிலவாய்ப் பூத்திட்டாய்
பளிச்சிடும் கதிர்களாய் மின்னினாய்

பார்வையாலே கேள்வி கேட்டாய்
கண்ணசைவைப் புரிந்து கொண்டாய்

மடியினில் குழந்தையாக்கினாய்
உழைப்பின் களைப்பை விரட்டினாய்

தோழியாய் உருகினாய்
மின்னலாய் என் உயிர் தேடி
முகம் புதைத்து மருகினாய்

ஆசையாய் ஆடை அணிந்து
தென்றலாய் மெல்ல விரிந்து
பனியாய் காதல் பொழிந்து
தேனாய் இதழ் விரித்து
இரவினிலே எனை வென்றாய்

சோர்ந்திருந்த சமயத்தில்
அமுதமாய் வீரம் பேசினாய்
விடியலாய் வந்து
நம்பிக்கை தந்தாய்
இழந்திருந்த உயிரை
எனக்கு மீட்டித் தந்தாய்

”யாதுமாகி நின்றாய்”
என்ற வார்த்தைகளின்
அர்த்தத்தை எனக்கு
இன்று புரிய வைத்தாய்!

Wednesday, July 29, 2009

மழை என் நாயகன்

காத்திருந்து காத்திருந்து
இன்று வந்த
முதல் மழையே
நீயும் என் நாயகன் போல்
இனிய இம்சையாகிறாய்

துறுதுறுப்பாய் சிறகடிக்கும் அவன்
சிறு தூறலாய் தூவிடும் நீ
அன்பால் உள்ளம் நனைக்கும் அவன்
ஆசையாய் உடல் நனைக்கும் நீ
காதல் வாசனையோடு அவன்
மண் வாசனையோடு நீ

புயலாய் அவன் அணைத்திட
என் உடல் சிதறும்
உரிமையாய் நீ தெரித்திட
என் மேனி நடுங்கும்

சில சமயம் சிறு மழையாய்
அவன் அன்பு அழைப்பு
சில சமயம் தொடர் மழையாய்
அவன் ஆசைப் பிடிவாதம்

அவன் நேசத்தில் எனை மறந்து
மேகமாய் மிதக்கும் நெஞ்சம்
உன் பொழிவில் உள்ளம் குளிர்ந்து
மயிலிறகாகும் என் இதயம்

எப்போதோ வருவதும்
சீராகப் பரவுவதும்
மின்னலாய் உடலில் புகுவதும்
இடியாய் அதிர்வைத் தருவதும்
புயலாய் என்னைத் தழுவுவதும்
விழிகளைச் சிறை பிடிப்பதும்
பகல் இரவை மறக்கடிப்பதும்

இன்னும் இன்னும் இன்னும்
என் நாயகனின் குணங்களாய்
என்னைத் தடம் புரளச் செய்யும்
என் அன்பு மழையை
இடைவிடாது ரசிக்கின்றேன்!

Tuesday, July 28, 2009

மழை என் காதலன்

கன்னத்தோடு சந்தனம் இட்டு
காதோடு காதல் பேசி
நெஞ்சினிலே சிம்மாசனம் இட்டு
என்னை இயக்கும்
வானமும் பூமியுமாகி
தென்றலைப் போல்
எனை உரசிச் செல்லும்
என் செல்ல மழையே
உன் காதல் சேட்டையில்
வெட்கப்பட்டு நிறம் மாறிய
என் முகம் கண்டு
தலையில் சூடிய மல்லிகையும்
சிகப்பு ரோஜாவாய் ஆனது..............

Sunday, July 26, 2009

ஆசை கொண்ட நெஞ்சினாய் வா...வா..வா.

நல்லதே நினைக்க
நல்லதே நடக்கும்
நல்லதே நடக்க
நல்லதே நினைக்கணும்

வண்ணமயமான எண்ணங்கள்
வானவில்லின் நேர்த்தியோடு
மழையைப் போன்ற குணத்தோடு
நெஞ்சில் ஆழமாய் உதித்திடணும்

வானத்தை மறைத்திட்ட
மேகமும் இல்லை
நல் எண்ணத்தை மறைத்திட்ட
மனமும் இல்லை

வானில் சூரியன் மறைந்து
சந்திரனின் ஒளி பரவும்
உன் மனதிலும்
ஆசையும் வெறுப்பும்
கோபமும் தாபமும்
மாறி வரும்
ஆனால்
கொண்ட எண்ணங்கள்
நிலைத்திட நீயும்
கொஞ்சம் உரமூட்டணும்

எண்ணங்களைக் கனவா காணணும்
நினைவிலும் அதையே வளர்க்கணும்
படமாய்க் கண்ணாடியில் ஒட்டி
காலையில் அதன்மேல் விழிக்கணும்

புடம் போட்ட தங்கமாய்
உன்னுள் எண்ணங்கள் ஜொலிக்கணும்

பின்

வலிமை பெற்ற எண்ணம்
வழியைத் தேடிப் போகணும்
வழியெங்கும் ஆதரவு திரட்டி
குறிக்கோளை அடைந்தே தீரணும்


Saturday, July 25, 2009

மௌனப் புயலாய் நீ....

நீங்காமல் இருக்கிறாய்
நிழலைப் போல!
இதமாக அணைக்கிறாய்
இமையைப் போல!
கலையாத கனவாக
நித்தம் வதைக்கிறாய்!
நினைவின் விளிம்பு வரை
ஊடுருவிச் செல்கிறாய்!

பூவாக மலர்கிறாய்!
இதழ் மூடி சிரிக்கிறாய்!
சூழலாகப் படிகிறாய்!
நோகாமல் தேடுகிறாய்!

இதழ்கள் குவித்து
புருவங்கள் நெரித்து
கண்கள் பனித்து
வாயசைக்காமல்
முணுமுணுத்து
புன்னகையோடு
செவிமடுத்து....

நினைவுகளை உயிர்ப்பிக்கும்
வலிகளை லேசாக்கும்
தனிமையை சுகமாக்கும்
ஏக்களை எளிதாக்கும்
கனவை உயிராக்கும்

மௌனப்புயலே உன்னில் நான்
தொலைந்து போகிறேன்!

Friday, July 24, 2009

மக்கிப்போகா நினைவுகள்!

மரத்தின் இலைகள் பசுமையாய்
செழித்து வளர்வது
அது உதிரும் வரை.....

மின் விசிறி போல் சுழற்றும்
நினைவுகளின் தாக்கங்கள்
இந்த வாழ்க்கை வரை......

மரத்தின் நிழல் குடையாக
அதன் கீழே மட்டும்......

மனிதனின் நிழல் அரணாக
செல்லும் இடமெல்லாம்......

மரங்களையும் தாண்டி
மனிதனையும் தாண்டி
இந்த இயற்கைச் சூழல்
புவி இருக்கும் வரை.....

இயற்கையின் இந்த
எழில்மிகு ஆக்கிரமிப்பை
நீ ஏன் கெடுக்க நினைக்கிறாய்?

மனிதநேயத்தை மறந்தாற்போல்
மகத்தான இந்த பூமியையும்
மாசு பட விடுவாயோ?

மக்கி விட
வருடங்கள் 600 ஆகுமாமே
மழை வளம்
மெல்ல இனிக் குறையுமாமே

ஓங்க வேண்டும் இந்த பூமியென்றால்
ஒழிக்கலாமே நாமும் பிளாஸ்டிக்கை!

மழைநீர் நிலத்துக்குள் செல்வதில்லையாம்
மண்ணுக்குள் காற்று கூட புக முடியாதாம்

மண்ணின் பிடிமானம் தகர்கிறதாம்
மண்சரிவும் இதனால்தான் நிகழ்கிறதாம்

எடுப்புச் சாப்பாடை இதை வைத்து சுற்றினால்
நஞ்செல்லாம் உணவோடு கலந்திடுதாம்

கழிவுகளை அகற்ற அதை எரித்தால்
காற்றோடு “டையாக்சின்” கலக்கிறதாம்
சுவாசித்தால் புற்று நோய் பிறக்கிறதாம்

சபரிமலை ஐயப்பனின் யானை மான்கள்
சப்தமினிறிப் பலியானதாம் இதைத் தின்று

மிச்சங்களை கடலில் கொட்டிய அமெரிக்காவில்
மடிந்தனவாம் அற்புத சீல்கள் ஆயிரமாயிரம்

எல்லாம் அறிந்த பெரியண்ணன் அமெரிக்காவிடம்
மறு உற்பத்தியாய் நாம் வாங்கும் இக்கழிவால்
இரட்டிப்பானதாம் இதன் கேடுகள் நம் நாட்டில்

தேவையில்லா பிளாஸ்டிக்கை வாங்கவே வேண்டாம் (Refuse)
வழியில்லை எனும் நிலையில் குறைத்துக் கொள்வோம் (Reduce)
முடிந்தவரை மறுபடியும் மறுபடியும் உபயோகிப்போம் (Reuse)
வீசி எறியும் முன் இன்னொரு முறை யோசிப்போம் (Retain)
இயற்கைக்கு இணக்கமாய் பிரித்தெடுப்போம் (Recycle)

மாற்று ஒன்று இப்புவியில் கண்டறியும் வரை
மறக்காமல் செயல்படுத்துவோம் இவ்வைந்தை!



==============================
=====


கீழே படித்த கட்டுரையின் தாக்கம் மேலே கவிதையாய் உங்கள் பார்வைக்கு


===================================


இன்று நமது அன்றாடப் பயன்பாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக செல்வாக்குப் பெற்றுள்ளன. இன்னொருபுறம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மறுபயன்பாடற்ற பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பெருங்கேடு ஏற்பட்டு வருகிறதென சுற்றுச்சூழலியளாளர்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையாக பிளாஸ்டிக் பொருட்களை விற்பதையும் பயன்படுத்துவதையும் தடை செய்யும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது.

பிளாஸ்டிக் பொருள்கள் தடைசட்டத்தை மீறுவோர் மீது ரூ.100 லிருந்து ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க இம்மசோதா வகை செய்கிறது. இச்சட்ட மசோதாவை சிலர் அறிமுக நிலையிலேயே எதிர்த்தனர்.
மாற்றுநடைமுறை எதுவும் உருவாக்காமல் பிளாஸ்டிக் தடை மசோதா கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதென எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன.

பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடுகளால் சுற்றுச்சூழலுக்கு பெருங்கேடு ஏற்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக்கால் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளதை பலரும் அறிவுபூர்வமாகவே சுட்டிக்காட்டுகின்றனர்.

இரும்பு, உலோகம் பயன்பாட்டை ஓரங்கட்டி பிளாஸ்டிக் பொருள்கள் எங்கும் எதிலும் ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கிவிட்டது. கற்காலம், இரும்புக்காலம் என்பது போல் பிளாஸ்டிக் காலம் எனும் நிலை உருவாகிவிட்டது.
இன்று பிளாஸ்டிக் தொழில்நுட்பம் உலகளாவிய கவனத்தை ஈர்க்கத் தொடங்கிவிட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் இப்போக்கு மேலும் அதிகரித்தது. போரில் ஜப்பானின் நுழைவுடன் தூரகிழக்கு நாடுகளில் இருந்துகிடைத்து வந்த ரப்பரின் வரவு தடைபட்டுப் போக, மேற்குலக விஞ்ஞானிகளின் பார்வை பிளாஸ்டிக் மீது திரும்பியது. ரப்பருக்குப் பதிலாக பிளாஸ்டிக்கை ஆயுத உற்பத்தியில் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

பிளாஸ்டிக் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை. அதாவது பெரும்பாலான பிளாஸ்டிக் வகைகள் தவாரப் பொருட்களான ரெசின்களிலிருந்தும், பெட்ரோலியப் பொருட்களிலிருந்தும் தயாரிக்கப் படுகின்றன. இந்நிலையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு மேலும் அதிகமாகத் தொடங்கியது. பிளாஸ்டிக் இலேசானது, தண்ணீரில் கரையாது, துருப் பிடிக்காது, மட்கிப் போகாது போன்ற காரணங் களால் பிளாஸ்டிக் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. உலோகங்கள் மரச்சாமான்கள் என்று உபயோகத்தில் இருந்த எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு இப்போது முழு உலகையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டது ப்ளாஸ்டிக்.

இந்தியாவில் 1990இல் புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக பல்வேறு பொருட்கள் மீதான சுங்க வரிகள் தளர்த்தப்பட்டன. இதனால் புதிய தொழில்நிறுவனங்கள் பரவலாயின. மேலும் குறைந்த விலையில் பிளாஸ்டிக்கை உருவாக்கி மக்களிடையே அதிக நுகர்ச்சியை உண்டாக்கும் வாயப்புகள் அதிகரித்தன. இதனால் பல நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை விட அதிகம் லாபத்தை ஈட்டத் தொடங்கின.

இதனால் பல சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனத்தை எதிர்த்து வணிகம் செய்ய முடியாமல் தனது நிறுவனங்களை மூடிவிட்டன. மறுபுறம் குறைந்த விலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு கிடைப்பதால் சணல், மூங்கில், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பொருட்கள் இன்று காணாமல் போய்விட்டன. அதாவது அவை வணிகத்தை இழந்துவிட்டன.

சணல் தொழில்: 1970 இல் இந்தியாவின் அந்நிய செலாவணியில் குறைந்தது 30% வருவாயைச் சணல் தொழில் பெற்றுத் தந்தது. இன்றோ அது 1% ஆகக் குறைந்து விட்டது. சொல்லப்போனால் அத்தொழில் செத்தேவிட்டது. சணலுக்கு மாற்றாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் இந்த சரிவு எற்பட்டது.

தோல் தொழில்: நம் காலணிகளுக்கு மூலமான பொருளாக தோல் விளங்கியது. இன்று பி.வி.சி - இன் அறிமுகத்திற்கு அடுத்து தோல்களின் பயன்பாடும் இறங்குமுகமாக உள்ளது.

அதே போன்று மரப்பொருட்களை எடுத்துக் கொண்டாலும் அதிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு காரணமாக அத்தொழிலும் நசிந்து வருகிறது.

ஆக பிளாஸ்டிக்கின் இந்த ஏகபோக வளர்ச்சி சத்தமில்லாமலேயே பூமியை சாகடித்துக் கொண்டிருக்கிறது. இதன் கோரமுகத்தை உலகம் இன்று நன்கு உணரத் தொடங்கியுள்ளது.

மண்ணோடு மண்ணாக மட்கிப் போகாத, தன்மைதான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தனி மவுசைக் கொடுத்தது. ஆனால் அதே உறுதித்தன்மைதான் சுற்றுச்சுழலின் பிரதான எதிரியாகிவிட்டது. மண்ணில் உள்ள பாக்டீரியா - பூஞ்சைக் காளான்கள் போன்ற நுண்ணு யிரிகளின் செயல்பாட்டினால் பொருட்கள் சிதைந்து அழிவதை விஞ்ஞானிகள் உயிர்மச்சிதைவு என்று பெயரிட்டிருக்கிறார்கள். வீட்டுக் கழிவுகள், பண்ணைக் கழிவுகள், மரச்சாமான்கள் எல்லாம் இப்படித்தான் மண்ணுடன் கரைந்து இயற்கைச் சூழற்சியில் பங்கேற்கின்றன.

உலோகப் பொருட்கள்கூட வேதிமாற்றங்களினால் துரு ஏறி காலப்போக்கில் அழிந்து போய்விடுகின்றன. ஆனால் பிளாஸ்டிக் மட்டும் மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாகக்கூட வாழும் வரத்தை மனிதர்களிடம் வாங்கி வைத்திருக்கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம். அந்தப் பொருட்களை ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசும் நுகர்வுக் கலாசாரத்தில் உள்ளோம். தண்ணீர், பால் அடைத்துவரும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் தேனீர், குவளைகள் போன்றன மலைபோல் குவிகின்றன. இவை சுற்றுச்சுழலின் அழகை கெடுக்கின்றன என்பது ஒருபுறம். ஆனால் இவற்றுக்கு அப்பால் இந்தப் பிளாஸ்டிக் பொருட்கள் மட்கி சிதையாமல் மண்ணில் மேலும் கீழும் காலங்காலமாகக் கிடக்கின்றன. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதிகம்.

பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீரை நிலத்தினுள் நுழைய அனுமதிப்பதேயில்லை. ஏற்கெனவே காடுகளை அழித்தல் பச்சைவீட்டு வளைவு போன்ற சீர்கேடுகளால் நா வறண்டு போயிருக்கும் பூமியின் மிச்சசொச்ச நிலத்தடி நீரையும் மேலும் பற்றாக்குறையாக்குகிறது. தண்ணீரை மட்டுமல்ல; மண்ணுக்குள் காற்று புகுவதைக்கூட தடுக்கிறது.

காற்றில்லாத சூழல் மண்ணுக்குக் கீழே கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டிருக்கும் நுண்ணுயிர்களின் உலகத்தை வெகுவாகப் பாதிக்கிறது. இதனால் உயிர்மச் சிதைவின்றிப் பொருட்களின் சுழற்சி தடைப்பட்டுப் போய்விடுகிறது. இது தாவரங்களின் வளர்ச்சியை மோசமாகப் பாதிக்கிறது. இதைவிட பிளாஸ்டிக் கழிவுகளின் கீழ் சிக்கி முளை கொள்ள முடியாமல் தவிக்கும் விதைகளின் அவஸ்தை அது வேறு தனி. தரைக்குக் கீழே புதையுண்டு கிடக்கும் பிளாஸ்டிக், மண்ணின் பிடிமானத்தை தளர்த்தி மலைப்பகுதிகளில் அவ்வவ்போது பெரும்மண் சரிவையும் ஏற்படுத்தி விடுகிறது. இவ்வாறு சுற்றுச்சூழலியலாளர்கள் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பிரச்சனைகளை பட்டியிலிடுகின்றனர்.

மருத்துவ விஞ்ஞானிகள்கூட பிளாஸ்டிக் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை தம் பங்குக்கு எச்சரிக்கை செய்கின்றனர். சில வகையான பிளாஸ்டிக் தாளினால் உணவுப் பொருட்களை சுற்றும்போது பிளாஸ்டிக்கிலுள்ள நச்சுப் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக உணவுடன் கலந்து விடுவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

பொதுவாக உணவில் பிளாஸ்டிக் நஞ்சு கலக்கும்போது தலைசுற்றல், வாந்தி பேதி, குடல்புண், நரம்புத் தளர்ச்சி தொடங்கி ஆண்மை இழப்பு, புற்றுநோய்கள், குழந்தைப் பிறப்பு பாதிப்புகள், தோல் நோய்கள், மூச்சுக் குழாயைத் தாக்கும் கடுமையான நோய், குடல்புண், செரியாமை, நரப்புத் தளர்ச்சி மற்றும் குருதி, சிறுநீரகம் உடலின் எதிர்ப்பு ஆற்றலைக் குறைத்தல் என இதன் பாதிப்புகள் நீளுகின்றன. பல்வேறு நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் இதை உறுதி செய்கின்றன.

பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து அகற்றுவது என்பதும் இலகுவான காரியமல்ல. பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் 'டையாக்சின்' என்ற நச்சுப்பொருள் காற்றுடன் கலக்கிறது. இதனைச் சுவாசிப் பவர்களுக்கு புற்றுநோய் அபாயம் ஏற்படுவதாக எச்சரிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளைக் கடலில் கொட்டி வந்த அமெரிக்காவில் ஆண்டுதோறும் 40,000 சீல் விலங்குகள் மடியத் தொடங்கின. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டுவதற்கு 1988 முதல் அமெரிக்கா தடைவிதித்தது.
இந்த மோசமான பின்விளைவுகளைக் கண்ட பின்னர் பிளாஸ்டிக்கை அதிக அளவில் உற்பத்தி செய்து பயன்படுத்தி வரும் மேற்குலக நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை மிகவும் நாசூக்காக மூன்றாம் உலக நாடுகளின் தலையில் கட்ட ஆரம்பித்துள்ளன. கணிசமான சலுகை விலையில் பிளாஸ்டிக் கழிவுகளை விற்கத் தொடங்கியிருப்பதுடன், கூடவே பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக்கை மறு உற்பத்தி செய்யும் நுட்பத்தையும் சேர்த்துத் தருவதால் மூன்றாம் உலக நாடுகளும் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கிக் குவித்து வருகின்றன.

ஆண்டுதோறும் அமெரிக்கா பயன்படுத்திவிட்டு தூக்கி வீசும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு கிட்டத்தட்ட 160 லட்சம் டன்கள். இவற்றில் 50 சதவீதம் இந்தியா, பங்காளதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மறு உற்பத்தி என்ற பெயரில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் மிகப் பெருமளவில் கொள்ளளவு செய்வது இந்தியாதான். பங்காளதேஷைவிட 115 சதவீதமும், பாகிஸ் தானைவிட 30 சதவீதமும் அதிகமாக இந்தியா பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கி வருகிறது.

இந்தியாவில் நச்சுக்கழிவுகளின் மறுசுழற்சியின் போது கழிவுகளைச் சூடுபடுத்தத் தேவைப்படும் ஆற்றலானது குறைந்தவிலை, இடவசதி சிக்கலின்மை, அதைச் செயல்படுத்த அரசின் சட்டதிட்டங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கும் அரசுக்கும் இல்லாமை ஆகியவற்றால் 'மறுசுழற்சி' என்ற தொழில் வளர மேலும் காரணமாகின்றன.

முறையாக தொழில்நுட்ப நடைமுறைகளைக் கையாண்டாலும் இதனால் உண்டாகும் மாசுக்கேடு, அழிவுகள் ஆகியவற்றிலிருந்து நாம்மீள முடியாது. இந்த அபாயமான வேலையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் எந்தப் பயற்சியும் அற்றவர்கள்; எந்த எச்சரிக்கையுணர்வும் ஊட்டப்படாதவர்கள்; பாதுகாப்புக் கருவிகள் அணியாதவர்கள். இதனால் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளில் அமைப்பு சாராத அத்தொழிலாளர்களுக்கு மருத்துவச் செலவோ அல்லது இழப்பீடோ கூடக் கிடைப்பதில்லை.

இதனால் அபாயமான, மட்டமான, நிலையில்லாத வேலைவாய்ப்புகள் உருவாவதற்கு வாய்ப்பு எற்பட்டுள்ளது.ஏறக்குறைய 3,50,000 பேர் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பதாக ஓர் அறிக்கை கூறுகிறது. அடுத்து இக்கழிவுகள் எங்கு உருவாக்கப்பட்டதோ அந்நாட்டிலேயே மறுசுழற்சி நடந்திருந்தால் உண்டாகக் கூடிய ஆரோக்கியக்கேட்டை ஏற்படுத்தும் இரட்டை விளைவை ஒரே நேரத்தில் உண்டாக்குகிறது.

பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்து சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மேலும் சில கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதாவது, ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கியெறியக் கூடிய பொருட்கள் அதிகளவில் உருவாக்குதல் தேவையற்றது. மேலும் அவை அபாயமான தனிமங்களைக் கொண்டவையாக (பிளாஸ்டிக் பாசிசம்) உருவாக்குதல் தேவையற்றது. ஒரு அபாயமான பொருளை மறுசுழற்சிக்கு உட் படுத்துவதால் அது மற்றொரு அபாயமான பொருளை உருவாக்குகிறது. எனவே மறுசுழற்சி அபாயமான பொருட்களைத் திரும்பவும் சந்தைக்கும், சுற்றுப்புறத்துக்கும் அதன் நச்சுத்தன்மையில் எந்தக் குறையுமின்றித் திரும்ப அனுப்புகின்றது.

ஆக இந்தியா போன்ற நாடுகள் பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தியால் மிக மோசமான அபாயமான விளைவுகளை எதிர்கொண்டுள்ளன. சென்னையை அடுத்த கும்மிடிபூண்டியில் டூ பாண்ட் நிறுவனம் நைலான் ஆலையை அமைத்ததன் பின்னணியை இந்த ரீதியில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போல அமெரிக்க மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குவளைகள், சீசாக்களைத் தயாரிக்க வென 'இந்திய ஆர்கானிக் கம்பெனி' மத்திய அரசின் அனுமதியுடன் எழுபத்தைந்து கோடி முதலீட்டில் தொழிற்சாலை நிறுவி வருகிறது.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா பிளாஸ்டிக் கழிவுகளால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து பிளாஸ்டிக்குக்கு எதிரான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தலையீட்டினால் சுற்றுலாத்தளங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்யும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

சபரிமலைப் பகுதிகளில் திரளும் ஐயப்ப பக்தர்கள் விட்டுச் செல்லும் பாலித்தீன் கழிவுகளைத் தின்று யானைகளும், மான்களும் பலியாவது இப்போது சாதாரணமாகிவிட்ட ஒன்று. ராஜஸ்தானில் இறந்த ஒரு பசுவின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்ததாகத் தெரிகிறது.

ஆண்டுக்கு எட்டரை லட்சம் மக்களுக்கும் அதிகமாக வந்து செல்லும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவிலும் கடந்த காலங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமான விலங்குகளுக்கு எமனாக அமைந்திருக்கின்றன. பார்வையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வீசப்படும் பாலித்தீன் பைகளைத் தின்று பரிதாபமாக உயிரைவிட்ட விலங்குகளின் பட்டியலில் காண்டா மிருகமும் ஆப்பிரிக்காவிலிருந்த மூன்றுலட்சம் ரூபாய் செலவில் தருவிக்கப்பட்ட லாமா என்னும் விலங்கும்கூட அடக்கம்.

தேசியப் பூங்காவிலும் ஒதுக்கப்பட்ட காடுகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதை இந்திய அரசு முற்றாகவே தடை செய்துள்ளது. இருந்தும் இது தொடர்பாக மக்களின் விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறதென்று சுற்றுச்சூழலியலாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிற்கு பிளாஸ்டிக் வந்தது சமீபத்திய ஆண்டுகளில்தான். ஆனால் கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் வெகுவாக பரவிட்டன. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படக்கூடிய விளைவுகள் அபாயங்கள் பற்றிய அக்கறைகைள உணர்ந்து வருகிறோம்.

பிளாஸ்டிக் பைகளின் தீயவிளைவுகளை உணர்ந்த இமாச்சல பிரதேச அரசு சிம்லாவில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க 1996 ஜூலையில் தடைவிதித்தது. இதனைத் தொடர்ந்து 1998 ஜனவரியில் கோவா மாநிலத்தில் தடை செய்யப்பட்டது. பின்பு 1998 நவம்பரில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது.இந்தப் பின்னணியில்தான் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கும் சட்டமசோதாவை தாக்கல் செய்தது.

இது இன்னும் பரிசீலனையில்தான் உள்ளது. திடீரென்று பிளாஸ்டிகிற்கு தடைவிதிக்கும் போது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அதிகம். ஓர் குறித்த காலப்பகுதியை எல்லையாகக் கொண்டு செயற்பட வேண்டும். மேலும் பிளாஸ்டிக்குக்கு மாற்றான பயன்பாட்டை விளக்கும் வகையிலான விழிப்புணர்வும் நம்பிக்கையும் வளர்க்கப்பட வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக்கின் ஊடாட்டம் நெருங்கிக் கலந்துவிட்ட நிலையில் பிளாஸ்டிக்கின் பிடியிலிருந்து முற்றாக விடுபடுவது என்பது முடியாத ஒன்றே. இந்நிலையில் அச்சுறுத்தும் பிளாஸ்டிக் அபாயத்தை எதிர்கொள்ள நம் முன்னால் உள்ள ஒரே வழி பிளாஸ்டிக் கழிவுகளை மேலாண்மை செய்வதுதான்.

தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது (Refuse),தேவைகளை இயன்றளவு குறைத்துக் கொள்வது (Reduce) முடிந்தவரை நீண்டகாலம் திரும்பத் திரும்ப பயன்படுத்தும் முறைகளைக் கடைப்பிடிப்பது (Reuse), எறிவதற்கு முன்னர் இன்னொரு முறை பயன்படுமா என்று சிந்திப்பது (Retain) எறியும் கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாத முறையில் மீளவும் பிளாஸ்டிக்கை பிரித்தெடுப்பது (Recycle) என்று இந்த ஐந்து செயல்பாடுகளையும் சரியான முறையில் ஒருங்கிணைக்கும் கழிவுமேலாண்மைதான் பிளாஸ்டிக்குக்கான மாற்று ஒன்றைக் கண்டறியும் வரைக்குமான குறைந்தபட்சத் தீர்வாக இருக்கமுடியும்.

Tuesday, July 21, 2009

தமிழ் நண்பர்கள் தங்க நட்பு

மாற்றத்துக்குட்பட்ட வாழ்க்கையில்
நிலையாக இருக்க நட்பு!

பனிச்சுமையில் மூழ்கும் மனதுக்கு
இதமாக இருக்க நட்பு!

ஆட்சிகள் மாறினாலும் சொந்தங்கள் கலைந்தாலும்
ஆழமான துணையாக நட்பு!

முகம் கூட பார்க்காமல் அதீத நம்பிக்கையில்
வளர்பிறையாக பிரகாசிக்க நட்பு!

இன்பம் துன்பம் எதுவானாலும்
இறுதி வரை தோள் கொடுக்க நட்பு!

இடம் தெரியாமல் தடம் பதித்தாலும்
துணையிருந்து காக்க நட்பு!

பாச மழையில் நனையும் நட்பு
வாழ்வை இனிதாய் நிறைக்கும் நட்பு

உள்ளூர் நட்பு! வெளியூர் நட்பு!
கடல் கடந்த காந்த நட்பு!

மடிக்கணினியில் தோன்றிய நட்பு!
இது ஆறு மணி நேர அன்பு நட்பு!

பள்ளி நட்பு கல்லூரி நட்பு
இதை விரட்டிய எமது
தமிழ் நண்பர்கள் தங்க நட்பு!

அடுத்து வரும்
சந்திப்பெனும் கொண்டாட்டத்திற்கு
ஆவலுடன்
காத்திருக்கேனப்பு!

Friday, July 17, 2009

என்னவளின் புன்னகை

எங்கிருந்து வந்தது
உன் புன்னகைக்கு மட்டும்
இத்தனை சக்தி!

சிதறிய கண்ணாடித் துகள்களில்
தெரியும் ஒவ்வொரு பிம்பத்திலும்
உன் இதயம் புன்னகைக்கிறதே!

உன்னைத் தீண்டினால்
அழகு புன்னகை
கலைந்திடுமோ என்று
சிறு தூறல் கூட
விலகிச் செல்கிறதே!

மின்னலின் வெட்டுகூட
என் தேவதையின்
புன்னகைப் பிரகாசத்தை மதித்து
மேகத்துள் ஆரம்பித்து
அங்கேயே மறைகிறதே நிமிடத்தில்!

நான் மட்டும் பேராசைப்பட்டு
என்னுள் சேமிக்க நினைத்தேன்....

ஈட்டியாக என் இதயத்தில் நுழைந்து
ஏக்கங்களை விதைத்து
எதிர்பார்ப்பைத் தூண்டி
தூக்கம் கெடுத்து
கனவுகளில் விழுந்து
தன்னிலை இழப்பேன்
என்று தெரியாமலே....

Friday, July 10, 2009

நிலைக்க மறுக்கும் நினைவலைகள்

நல்ல துயிலில் ஓர் இனிய கனவு
அந்த கனவின் விழிப்பில்
நினைவில் நிழலோடு கிறக்கம்
நினைத்த போதெல்லாம் ஏக்கம்
நினைவில்லாத போது மட்டும் தூக்கம்
மீண்டும் கனவின் தாக்கம்

எதுவும் பிடிக்கவில்லை
எதன் மீதும் கவனம் இல்லை
புரிந்தாலும் நாட்டம் இல்லை
வீடும் வெளிப்புறமும்
ஒன்றுபோல் தெரிகிறது
எனக்குள் நானே சிரிக்கிறேன்
அந்த சிரிப்பில் எனை நானே மறந்தேன்
மகிழ்ச்சியின் மடியிலே நான்....

சிந்தனை இலக்கில்லாமல் போக
நெஞ்சில் நிறைகின்றது ஏக்கம்
வழக்கம் இல்லாத் தேக்கம்
துடிக்கும் இந்த மனசு
எதை எதையோ நினைக்கும்

நிலைக்க மறுக்கும் நினைவலைகள்
அதன் பின்
தொடர்ந்து செல்லும் எண்ணங்கள்
அலைந்து திரியும் அமைதியின்மை
அதனால்
நிம்மதி தொலைந்து மனதில் வெறுமை
தெரியவில்லை புரியவில்லை
தன்னிறக்கத்தில் வாடும் மனதின் நிலை!

Sunday, July 5, 2009

இப்படியும் ரசிப்பேன்

விதவிதமான உடைகளில்
உன்னை பார்த்து
ரசித்து இருக்கிறேன்
ஆனால்,
இன்று போல் என்றும் இல்லையடி
எனக்கென உணவு சமைத்த பொழுது...
முத்து முத்தான வியர்வைத்துளிகளில்...
கையில் கரண்டியுடன்...
இடுப்பு நெளிவில் தூக்கிச் சொருகிய சேலையில்....
அழகாய்த் தான் இருந்தாய்
மறுமுறை காணக் காத்துக் கிடக்கிறேன்
ஏன் எனில்
எப்பொழுதாவது தானே நீ சமைப்பாய்
காத்திருக்கிறேன் கண்ணே................

Wednesday, July 1, 2009

மழையில் நனைந்த காதல்

ஒரு நாள் மாலை நான் மொட்டை மாடியில் இருந்தேன். மாலை நேர பொழுது. வெயில் அதிகமாக இல்லை. வானத்தில் மேகங்கள் வாக்கிங் போய் கொண்டிருப்பதை ரசித்து கொண்டிருந்தேன்.இதமான தென்றல் காற்று வீச என் மீதிருந்த ஈரமெல்லாம் விலகியிருந்தது. ரம்மியமான சூழல். எதிர் வீட்டு சுடிதாரை ஆசையுடன் ரசித்துக் கொண்டிருந்தேன்.

தென்றல் காற்று குளிர் காற்றானது. அண்ணாந்து பார்த்தேன். வாக்கிங் சென்ற மேகங்கள் திடீரென்று கால் தடுக்கி கீழே விழ, உடனே, மழை பொழியத் தொடங்கியது.

கீழே அம்மா, "ஏய், மொட்டை மாடில காயப் போட்டுருக்கும் உன் அண்ணனோட பேண்ட்டை எடுத்துக்கிட்டு வா" என்று விரட்டினார்கள்.

ஓடி வந்த தம்பி,கொடியில் காய்ந்து கொண்டிருந்த என்னை 'வெடு'க்கென்று அள்ளி கையில் போட்டவாறு ஓடினான். போகும்போது, எதிர்த்த வீட்டில் காய்ந்துகொண்டிருந்த நீலக்கலர் சுட்தார், "நான் மட்டும் இங்கே தனியா நனையறபோது, நீ மட்டும் கீழே போறியேடா, இதுதான் காதலா?" என்று கோபத்துடன் என்னைக் கேட்பது போல் இருந்தது.

சே.. எங்க காதலுக்கு இடையில் இந்த மனுஷங்க ஏன் தான் நந்தி மாதிரி வர்றாங்களோ" என்று தனியே புலம்பியது பேண்ட்.