நிலைவாசல் முட்டி
உன் நெற்றி புடைத்ததில்
மனம் பதறி நான் துடித்து
ஐஸ் ஒத்தடம் கொடுத்து
அன்பாய்த் தடவி
மருந்துகள் இட்டு
கவனித்த நேரத்தில்
உன் கண்களில் பளிச்சிட்ட
பெருமையின் பிரகாசத்தில்...
வருடத்திற்கு ஒரு முறை
சொற்ப விடுமுறையில்
வீட்டை நாடி வந்த
முதல் நாள் பகலில்
காலையிலிருந்து தனியே
கன்னத்தில் கை வைத்து
காத்திருக்கும் அன்புக்குழந்தை
ஆட்டோவைக் கண்டவுடன்
“அப்பா வந்தாச்சு” என
அழைப்புக் குரல் கொடுக்க
அன்றலர்ந்த மலராய்
தலை குளித்து மலர் சூடி
எட்டிப் பார்க்கும்
உன் எதிர்பார்ப்பின் ஆவலில்.....
நீ மும்முரமாய்
சமையல் செய்யும்பொழுது
பின்னிருந்து அணைக்கையில்
வியர்வையின் கசகசப்பில்
மெல்ல நீ நெளிந்தாலும்
முகத்தில் உதிக்கும்
கர்வப் புன்னகையில்.....
கூடல் விரும்பும் செல்களில்
மோகம் கொண்ட நேரத்தில்
நம்மைத் தனியே விடாது
மடிமேல் விளையாடும்
அன்புக் குழந்தையை
விலக்க மனமில்லாமல்
ஆசையை அடக்கிய
அர்த்தம் கொண்ட பார்வையில்...
பிள்ளை வாளி
எடுத்துக் கொடுக்க
மனைவி சலவைத்தூள்
கரைத்துக் கொடுக்க
குடும்பத் தலைவன்
இருசக்கர வண்டி அலச
குடும்பமே இணைந்து செய்யும்
வேலைகளின் பங்கெடுப்பில்....
உன் மீதான என் காதலை
மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்
என்ற வரைமுறைக்குள்
சுருக்கி விட முடியுமா?
பிரிந்திருந்தாலும் விலகாது
உறையாத நினைவுளில்
ஒளிந்திருக்கும்
நம் நேசம் சொல்லும்
நம் காதலும்
தெய்வீகமானதென்று
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment