Wednesday, August 5, 2009

கொளத்தாங்கரை கும்மி!

அக்காவுக்கு சொகமில்லேன்னு
பச்சப்புள்ளக்கு பசிக்குமேன்னு
அம்மா இங்கே போகச் சொல்ல
பாசத்திலே ஓடியாந்தேன்

துணிமணியைத் தொவைச்சுப்போட
கொளத்தாங்கரைக்கு வந்து சேந்தா
சரசம் பண்ண நினைக்கலாமா
விரசமா நீங்க பேசலாமா

உங்க அண்ணி மட்டும் அம்மாவா
ஒடன் பிறந்தா ரத்தினமா
நம்பி என்னை அனுப்பி வச்சா
மாசமாக்க பாக்கலாமா

அக்கா இருந்தா ராமன் மாறி
குளத்துக்குள்ள கிருஷ்ணன் மாறி
வலையை வீசி கொல்லுறீயளே
வகிந்துருவேன் தள்ளி நில்லும்

தண்ணிய விட்டு வெளியே வந்தா
செதுல எடுத்து சுத்தம் பண்ணி
கொதிக்கிற மீன் கொழம்பில
கொட்டிப்புடுவேன் பாத்துக்கோரும்

உன் உடம்பில் ஒரு பாதியா
உன் உசிரில் சரி பாதியா
பொஞ்சாதி ஒருத்தி இருக்கா
பொன்னாட்டாம் ஜொலிப்போட

அந்தக் காவல் தெய்வம் கண்ணகியை
கண் கலங்க வைக்காதே
ஊரு மேயும் எண்ணத்தை
உடைப்பில் ஓடு என் மச்சான்

No comments:

Post a Comment