Wednesday, July 29, 2009

மழை என் நாயகன்

காத்திருந்து காத்திருந்து
இன்று வந்த
முதல் மழையே
நீயும் என் நாயகன் போல்
இனிய இம்சையாகிறாய்

துறுதுறுப்பாய் சிறகடிக்கும் அவன்
சிறு தூறலாய் தூவிடும் நீ
அன்பால் உள்ளம் நனைக்கும் அவன்
ஆசையாய் உடல் நனைக்கும் நீ
காதல் வாசனையோடு அவன்
மண் வாசனையோடு நீ

புயலாய் அவன் அணைத்திட
என் உடல் சிதறும்
உரிமையாய் நீ தெரித்திட
என் மேனி நடுங்கும்

சில சமயம் சிறு மழையாய்
அவன் அன்பு அழைப்பு
சில சமயம் தொடர் மழையாய்
அவன் ஆசைப் பிடிவாதம்

அவன் நேசத்தில் எனை மறந்து
மேகமாய் மிதக்கும் நெஞ்சம்
உன் பொழிவில் உள்ளம் குளிர்ந்து
மயிலிறகாகும் என் இதயம்

எப்போதோ வருவதும்
சீராகப் பரவுவதும்
மின்னலாய் உடலில் புகுவதும்
இடியாய் அதிர்வைத் தருவதும்
புயலாய் என்னைத் தழுவுவதும்
விழிகளைச் சிறை பிடிப்பதும்
பகல் இரவை மறக்கடிப்பதும்

இன்னும் இன்னும் இன்னும்
என் நாயகனின் குணங்களாய்
என்னைத் தடம் புரளச் செய்யும்
என் அன்பு மழையை
இடைவிடாது ரசிக்கின்றேன்!

1 comment:

  1. ஏய் மழையே ...
    நீ என்ன தவம் செய்தாயோ!!! இப்படி ஒரு காதலியை அடைய

    ReplyDelete